Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜான்சி: ''பணம் சம்பாதிப்பது அவசியம் தான்; அதற்காக மக்கள் நலப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொள்வது நியாயமல்ல,'' என, உத்தர பிரதேச அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்தார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் ஜல்சக்தி துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்வதந்திர தேவ் சிங் உள்ளார். இவர், ஜான்சி மாவட்டத்தின் கரவுதா பகுதியில் செய்யப்பட்டு உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நேற்று பார்வையிட்டார்.
அப்போது, கால்வாய் ஒன்றில் சரியாக துார் வாரப்படாமல் இருந்தது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர், அதிகாரிகளிடம் விசாரித்தார். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
''கால்வாய் துார் வாரப்பட்ட லட்சணத்தை நீங்களே பாருங்கள். ஏழை விவசாயிகளின் நிலத்துக்கு நீர் பாய கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் கால்வாய் அப்படியே இருக்கிறது. ''பணம் சம்பாதிப்பது அவசியம் தான். ஆனால், மொத்த நிதியையும் சுருட்டிக் கொள்வது நியாயமல்ல,'' என அதிகாரிகளிடம் கடுமையாக தெரிவித்தார்.